Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

Friday, March 8, 2013

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை...

என்னைப் பொறுத்தவரை,  சுமார் இரண்டு தலைமுறைகள் சரியாக இல்லை .....உம்ம்ம் , இப்படி சொல்வதைவிட, இரண்டு தலைமுறைகளாக வளர்ப்பு  சரியில்லை என்று சொல்லவேண்டும்...

பிள்ளைகளை படி படி என்றும் , முதல் மதிப்பெண் வாங்கவேண்டும் என்றும், போட்டி போடவேண்டும் என்றும், ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்றும், convent இல் படிக்க வேண்டும் என்றும்,  IIT க்கு போகவேண்டும் என்றும், அமெரிக்கா போகவேண்டும் என்றும், infosys இல் வேலை வாங்க வேண்டும் என்றும், வீடு வாங்க வேண்டும் என்றும், car  வாங்க வேண்டும் என்றும், எதிர் வீட்டுக்காரன் பிள்ளையை விடவும், உடன் வேலை செய்வோரின் பிள்ளையை விடவும் , ...முக்கியமாக உறவுக்காரன் - அதிலும் பங்காளியின் பிள்ளையைவிடவும் நிறைய சம்பாதிக்கவும் - மிடுக்காக இருக்கவும் கற்றுத்தந்த பெற்றோர், மனித உறவுகளை கற்றுத்தர தவறிவிட்டனர்...

நெருங்கிய உறவுங்களின் இல்ல இன்பத்துன்ப  நிகழ்வுகளுக்கு பிள்ளைகள்  வருவதில்லை ...மாமன் யார், சித்தப்பன் யார் , பெரியப்பன் யார் , உடன் வேலை செய்பவன் யார் என்றெல்லாம் தெரியாது.. எல்லாம் uncle கள். அவர்களும் ஞாயிற்று கிழமைகளில் அமையும் ஏதோ ஓரிரு  நிகழ்வில் பார்ப்பது...

பாசம் பந்தம் எல்லாம் கடந்த இந்த ஞானிகள், படித்து முடித்ததும் பெட்டியை கட்டிக்கொண்டு 'திரவியம் தேட ' , இரண்டாம் தரக்குடிமகனாக வாழ மேலைநாடு செல்கிறார்கள்...திரவியம் திரவியம் ..திரவியம் ..அதை எதற்கு தேடுகிறோம் என்று தான் புரியாது ...

இங்கு பெற்றோர், தம் பிள்ளைகளின் ஜகதலபிரதாப சாதனைகளை பறைசாற்றிக்கொண்டு ...இவன் california வில் இருக்கிறான், அவன் Detroit இல் இருக்கிறான் என்று சில நாட்கள் சொல்வார்கள் ...பின் தவம் நிறைய செய்திருப்பின் , நம்ம ஊர் வரன் பார்த்து திருமணம் ..அப்புறம் baby sitting க்கு 6 மாதம் பயணம்....

பின் மூப்பு ...மூட்டு வலி , நோய். அப்போதுவேண்டுவது அன்பும் ஆதரவும் ...பிள்ளைகளோ தயை மிகுந்தவரானால் கோவையிலும் புதுவையிலும் old age acco வில் தங்க ஏற்ப்பாடு ..ஆனால் அவர்களை வைத்துப் பார்ப்பதோ,  வந்துப்  பார்ப்பதோ இல்லை. ஒருமுறை வந்தால் என்ன என்று ஏங்கும் பெற்றோர் பலர் ..ஏங்கியே மறைவோரும் உளர்

.....ஆனால் அவர்கள் தான் திரவியம் தேடுவதில் மும்முரமாக இருக்கிறார்களே ! அவர்களைச்  சொல்லிக் குற்றமில்லை ..உறவுகளைவிட பொருளும் , மிடுக்கும் தான் முக்கியம் என்று வளர்த்தவர்  இவர்கள் தானே !